Tuesday, August 17, 2010

உடல் தானம்

குருதிக் கொடையளிக்க
கூவி அழைத்தாலும்
கூப்பிட்டால் வருவோர் யார்
குமுகாய வீதிகளில்

உறுப்பு கொடையளிக்க
உற்றாரும் உறவுகளும்
விருப்போடு வருவதில்லை
வீணாச்சு பல உயிர்கள்

கண்ணப்பன் விழிக்கொடை
கர்ணனவன் குருதிக்கொடை
கர்மவீரன் ஜிதேந்திரன்
காட்டிய உடல்கொடை

வாழும் தலைமுறைக்கு
வழிகாட்டி சென்றபின்னும்
பாழும் மடமைகளால்
பார்த்திருத்தல் சரிதானா?

மூளை இறந்தபின்னே
முழு நிலமை புரிந்தபின்னே
ஆளை இழந்தபின்னே
அழுது புலம்புவதேன்?

மரங்கூட கிளைகொடுத்து
மண்ணில் பலமரங்கள்
வரமாக அளிக்கிறதே
வாழக் கற்றுக் கொள்வோம்

செயலிழந்த உடலுக்குள்
சாகாத உறுப்புகளை
இயலாத மாந்தருக்கு
எடுத்து வைத்தல் நலந்தானே?

செத்தபின்னே சிவலோகம்
செல்லுவதை யாரரிவார்
புத்தியுடன் உடல்கொடை
பூமிக்கே பெருங்கொடை

No comments: